கம்பம், செப். 26: காமயகவுண்டன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து விதமான மூட்டு வலிகளுக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் வலி நிவாரண முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா தலைமை தாங்கினார். கழுத்து வலி, இடுப்பு வலி, முழங்கால் மூட்டு வலி, சர்க்கரை நோயாளிகளின் தோள்பட்டை வலி, வாத நீர், உப்பு நீர் பற்றியும் அதற்கான மருந்துகள் குறித்தும் காமயகவுண்டன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் டாக்டர் சிராஜூதீன் விளக்கி கூறினார்.
முகாமில் மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானத்தை தடுக்கும் மருந்துகளான அமுக்கரா சூரணம், ஆறுமுக செந்தூரம், சிலாசத்து பஸ்பம், முத்துச் சிப்பி பஸ்பம் மற்றும் பிண்ட தைலம், கற்பூராதி தைலம் அடங்கிய மருந்து பெட்டகம் இலவசமாக வழங்கியதோடு, முழங்கால் மூட்டு வலிக்கான கால் உயர்த்துதல், ஹாம்ஸ்டிரிங் பயிற்சி, பாதி அமர்ந்து எழும் பயிற்சி, ஒரு கால் உயர்த்துதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு சித்த மருத்துவ பெட்டகத்தை பெற்றுச் சென்றனர். நிகழ்ச்சியில் மருந்தாளுநர் கணேசன், செவிலியர்கள், பணியாளர்கள், கவிஞர் பரதன், ரெங்கேஸ்வரன், கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.