வேதாரண்யம், செப்.26: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் வைக்கோல் பெட்டி முறையில் உணவு தயாரித்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அன்புவினோத், ஆகாஷ். இவர்கள் இருவரும் ஆசிரியர் கார்த்திகேயன் வழிகாட்டுதலோடு வைக்கோல் பெட்டி அடுப்பை தயார் செய்துள்ளனர்.மாணவர்கள் இருவரும் மரப்பெட்டியினை உண்டு செய்து அதனை வைக்கோலை கொண்டு நிரப்பி எரிபொருளை சிக்கனப்படுத்தி சத்து குறையாத உணவுகளை தயார் செய்யும் முறையை கண்டு பிடித்துள்ளனர். இதன்மூலம் 30 நாள் பயன்பாட்டிற்கு வரும் காஸ் 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என மாணவர்கள் தெரிவித்தனர். தேவையான அளவு மரப்பெட்டி ஒன்று தயார் செய்து அதில் துண்டுதுண்டாக வைக்கோலை வைத்து நிரப்பி அதன் நடுவே பாத்திரம் வைக்கும் அளவிற்கு இடைவெளி வைத்து வைக்கோலை வைக்க வேண்டும். தற்போது சமைக்க பயன்படும் அரிசியை 1:2 என்ற வகிதத்தில் அரிசியும் நீரையும் எடுத்து அதை கேஸ் அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் பாத்திரத்துடன் அப்படியே எடுத்து வைக்கோல் பெட்டியில் வைத்து வெப்பம் வெளிவராத நிலையில் மூடவேண்டும். 30 நிமிடம் கழித்து பார்த்தால் சாதம் நன்றாக வெந்திருக்கும். இந்த சாதத்தை நாம் வடிக்க வேண்டியதில்லை. இதனால் சத்து கூடுதலாக கிடைக்கிறது.