மயிலாடுதுறை, செப்.26: மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் பாதாள சாக்கடை குழாய் 13வது முறையாக உடைந்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது.மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு பாதாளசாக்கடை திட்டம் ரூ.42 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பிரதான குழாய்கள் மூலம் ஆறுபாதி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும் என்ற திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் சுத்திரிக்கப்பட இல்லை. அதை வைத்து புல் வளர்க்கும் திட்டமும் பாழானது. 36 வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் சேரும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்புவதற்காக 8 இடங்களில் பம்பிங்க் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கச்சேரிசாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென்று சாலையில் பள்ளம் ஏற்பட்டது. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பாதாளசாக்கடை குழாய் உடைந்து கழிவுநீர் கசிந்து மண் அறிப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியது தெரியவந்தது. மாயூரநாதரர் வடக்குவீதி, நகராட்சி அலுவலகம் எதிரில், கிளை சிறைச்சாலை அருகில், டபீர்தெரு, கொத்தத்தெரு என்று 12க்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென்று சாலையில் பள்ளம் ஏற்பட்டு அவ்வப்பொழுது சரிசெய்யப்பட்டு வந்தாலும், தரங்கை சாலையில் வேலை இன்னும் முடியாத நிலையில் நேற்று மயிலாடுதுயை-திருவாரூர் சாலை கண்ணாரத்தெரு பகுதியில் சாலை திடீரென்று உள்வாங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் தடை ஏற்பட்டது.