மாஜி கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் கைது 3 பேருக்கு வலை

திருவெறும்பூர், செப்.25: திருவெறும்பூர் அருகே 2 இடங்களில் மணல் கடத்தியதாக முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே கிளியூர் கல்லணை சாலையில் வெண்ணாற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற திருவெறும்பூர் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட வேனை பறிமுதல் செய்ததோடு தஞ்சை மாவட்டம், பாதர்குடியை சேர்ந்த கவுதமன் மகன் பிரேம்சந்தர்(27), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் குணசீலன்(20), உத்தமர்சீலியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் சிவமணி மகன் லட்சுமிகாந்தன்(27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் கூத்தைப்பாரை சேர்ந்த ஸ்டாலின், விஜய் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.அதேபோல் காட்டூர் அந்தோணியார்கோவில் பகுதியில் டிப்பர் லாரியில் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லாரியை பிடித்த விஏஓ சிவலிங்கம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து துறையூர் நரசிங்கபுரத்தை சேர்ந்த செல்வராஜ்(50) என்பவரை கைது செய்ததோடு, திருவானைக்காவலை சேர்ந்த லாரி உரிமையாளர் ரவிக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: