ஈரோடு, செப். 25: மழைநீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் சூரம்பட்டி அணைக்கட்டு 59 செ.மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அதிக தண்ணீர் தேக்கப்பட்டு பாசனத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் மூலம் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்த வாய்க்காலில் இருந்து வரும் கசிவுநீர் மற்றும் பெருந்துறை, செங்கோடம்பள்ளம், திண்டல், காரப்பாறை, வேப்பம்பாளையம், வில்லரசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழைநீர் வாய்க்கால்கள் மூலம் வந்து ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர், இங்கிருந்து நஞ்சை ஊத்துக்குளி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக, மழைக்காலத்தில் மட்டுமே சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. மற்ற காலங்களில் அணையின் நீர்பிடிப்பு பகுதி தாழ்வாகவும், வாய்க்காலின் மதகுகள் உயரமாகவும் உள்ளதால் அணையில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டாலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.