விருத்தாசலம் அருகே நிலத்தில் மேய்ந்த மாடு திடீர் சாவு

விருத்தாசலம், செப். 25: விருத்தாசலம் அருகே உள்ள சின்னக்கண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் சசிகுமார் (29). இவர் அப்பகுதியில் காலியாக உள்ள முத்துக்குமார் என்பவரின் விவசாய நிலத்தில் தனது பசுமாட்டை கட்டி மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதேபோல் பலரது மாடுகளும் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தன. இந்நிலையில் முத்துக்குமார் நிலத்தில் பாதுகாவலராக இருந்து வந்த அதே பகுதியை சேர்ந்த சின்னப்பையன் மகன் மனோகரன் என்பவர் மாடுகளை இங்கு மேய்க்கக் கூடாது என மாட்டின் உரிமையாளர்களை திட்டியுள்ளார். இதனால் அனைவரும் தங்களது மாடுகளை அவிழ்த்துக்கொண்டு சென்று விட்டனர். ஆனால் சசிகுமார் மட்டும் நீண்ட நேரம் கழித்து தனது மாட்டை ஓட்டிக் கொண்டு செல்ல வந்துள்ளார். அப்போது மாட்டின் அருகிலேயே மனோகரன் நின்று கொண்டிருந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே அந்த மாடு மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சசிக்குமார், மனோகர் தான் மாட்டுக்கு ஏதாவது விஷம் கொடுத்து இருக்கலாமென நினைத்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மனோகரன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: