தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது

திருவெண்ணெய்நல்லூர், மே 16: திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிபோதையில் தந்தையை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்ற அவரது மகனை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பல்லரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (52), லாரி டிரைவர். மனைவி பெயர் அபிராமி (48). இவர்களுக்கு ஆனந்தகுமார் என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். தேன்மொழிக்கு திருமணமாகி மங்கலம்பேட்டையில் கணவருடன் வசித்து வருகிறார். ஆனந்தகுமார் பல்லரிபாளையத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். குடிப்பழக்கம் உள்ள ஆனந்தகுமார் தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஆனந்தகுமார் தந்தையிடம் வழக்கம்போல் தகராறு செய்துள்ளார். அப்போது அவரது தாயார் அபிராமி, இரவு சமையலுக்காக காய்கறி வெட்டிக் கொண்டிருந்தார்.

தந்தையிடம் தகராறு செய்த ஆனந்தகுமார் ஆத்திரத்தில் தாயார் காய்கறி வெட்டிக் கொண்டிருந்த கத்தியை பிடுங்கி தந்தையின் இடுப்பு பக்கத்தில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அரிகிருஷ்ணன் சாய்ந்தார். இதைப் பார்த்த ஆனந்தகுமார் மற்றும் தாய் அபிராமி ஆகியோர் கதறி அழுதனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அரிகிருஷ்ணனை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது வழியிலேயே அவர் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆனந்தகுமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: