கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன் கடலூரில் பயங்கரம்

கடலூர், மே 18: கடலூர் முதுநகரில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனங்குப்பத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் ரமேஷ் (39). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி (35). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் இந்துமதியின் தங்கையான சூர்யா (33) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தேஜ(10) என்ற மகளும், ரிஷிவந்த் (3) என்ற மகனும் உள்ளனர். ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது சூர்யா கடலூர் முதுநகரில் வேறு ஒரு வாலிபருடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை பலமுறை ரமேஷ் கண்டித்துள்ளார். இருப்பினும் சூர்யா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் ரமேஷ் சொந்த ஊருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வந்துள்ளார். பின்னர் உறவினர்களும், குடும்பத்தாரும் சமாதானம் பேசி சூர்யாவை ரமேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். இதையடுத்து கடலூர் முதுநகர் சோனகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சூர்யாவுக்கும், ரமேஷுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் கழுத்து, கை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேஷை தேடி வருகின்றனர். கள்ளத்தொடர்பு பிரச்னையில் மனைவியை கணவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பலமுறை கண்டித்த கணவன் ரமேஷ் துபாயில் மீன்பிடி வேலை செய்து வருவதால் அடிக்கடி துபாய் நாட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனால் சூர்யா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். இதன் காரணமாக சூர்யா கடலூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவ்வாறு வேலைக்கு சென்று வரும்போது கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. மேலும் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர். இதை அறிந்த ரமேஷ் சூர்யாவை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் சூர்யா இது பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதனால் சிறிது நாட்கள் ரமேஷ் சூர்யாவை பிரிந்து வாழ்ந்துள்ளார். இதன் பின்னர் சூர்யாவின் உறவினர்கள் அவருக்கு அறிவுரை கூறி ரமேஷூடன் சேர்ந்து வாழ வைத்துள்ளனர். அதையும் மீறி தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டதால் நேற்று இதுகுறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரமேஷ் சூர்யாவை கொலை செய்துள்ளார்.

The post கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன் கடலூரில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: