பண்ருட்டி அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு

பண்ருட்டி, மே 12: பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென் பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது பழங்கால இரண்டு செப்பு நாணயங்களை கண்டெடுத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், தென் பெண்ணையாற்றில் கண்டறிந்த இரண்டு செப்பு நாணயங்களை ஆய்வு செய்ததில் அவை விஜயநகர காலத்தை சேர்ந்தது என தெரியவந்தது. இவை 15ம் நூற்றாண்டை சேர்ந்தவை. நாணயத்தின் முன் பக்கத்தில் காளையின் உருவமும், பின் பக்கத்தில் தெலுங்கு எழுத்தில் தேவராயர் என்றும் எழுதப்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்று படுகையில் ஏற்கனவே செப்பு நாணயங்கள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சங்க காலம் முதல் விஜயநகர காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. தென்பெண்ணை ஆற்று பகுதிகள் பழங்கால மக்களின் வாழ்விடமாகவும், வரலாற்று மிக்க நகரங்களாகவும் இருந்து இருக்கலாம், என்றனர்.

The post பண்ருட்டி அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: