பணி மாறுதலால் விரக்தி ரயில்வே எஸ்பி அலுவலகம் முன் எஸ்ஐ தீக்குளிக்க போவதாக மிரட்டல் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருச்சி, செப்.24: பணியிடை மாறுதலால் விரக்தியடைந்த ரயில்வே எஸ்ஐ, எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்கப்போவதாக மிரட்டியதால் திருச்சியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி ரயில்வேயில் எஸ்ஐயாக பணியில் இருந்த ஒருவர் நீலகிரிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த எஸ்ஐ, பணி மாறுதல் உத்தரவை வாங்காமல் கிராப்பட்டியில் உள்ள ரயில்வே எஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க போவதாகவும், ரயில்வே துறையில் பணியாற்ற விருப்பம் இல்லை எனவும் மோசமான துறை என சக போலீசாரிடம் கூறி புலம்பி உள்ளார். இதுகுறித்து ரயில்வே எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்பி அலுவலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அலுவலகம் வரும் அனைத்து போலீசாரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாலை வரை தீக்குளிப்பதாக கூறிய எஸ்ஐ வராததால் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் கலைந்து சென்றனர். பணி மாறுதல் உத்தரவால் மனவேதனை அடைந்து தீக்குளிக்க போவதாக எஸ்ஐ கூறியிருந்தது ரயில்வே துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: