சென்னை, செப். 17: சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (55). இவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு பேத்திக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக பெரும்பாக்கம், சுனாமி குடியிருப்பை சேர்ந்த காவா சரவணன் (45) உள்பட 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் மது விருந்து நடைபெற்றது. இதில் போதை அதிகமாகவே மற்ற உறவினர்களிடம் காவா சரவணன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே அடிதடி நடந்தது. அப்போது மாரியம்மாளின் உறவினர்கள் குமரன் (35), செந்தில் (32) மற்றும் குகன் (22) ஆகிய 3 பேரும் காவா சரவணன் சமரசப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களை சரவணன் தாக்க முயற்சிக்கவே, 3 பேரும் சரமாரியாக அவரை அடித்துள்ளனர்.
இதுகுறித்து மகன் அரிபாபு (26), மைத்துனர் வெங்கடேசன் (35) ஆகியோருக்கு காவா சரவணன் செல்போன் மூலம் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். இதையடுத்து ஒரு கும்பல் ஆட்டோவில் கத்தி, உருட்டுக்கட்டைகளுடன் விரைந்து வந்தனர். அங்கு காவா சரவணனை தாக்கிய 3 பேரை சுற்றி வளைத்து சரமாரி அடித்தனர். மற்ற உறவினர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். இந்த தாக்குதலில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் சரவணனின் மைத்துனர் வெங்கடேசனை ஒரு கும்பல் பிரியாணி கலக்கும் இரும்பு கரண்டியால் அடித்ததில் மண்டை உடைந்து வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். குமரன் படுகாயம் அடைந்தார்.