ஜெயங்கொண்டம், செப். 11: ஆமணக்கம்தோண்டியில் உயர் மின்னழுத்த கோபுரம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டம் மின்வாரிய அலவலகம் முன் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆமணக்கந்தோண்டி கிராமம் வடக்கு தெருவில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த பகுதியில் வயல்வெளிக்கு விவசாயம் செய்ய நிலத்துக்கு மோட்டார் இயக்க வேண்டி மின்சாரம் தேவைப்படுவதால் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்றோர், விதவைகள் சிறப்பு முன்னுரிமை திட்டத்தின்கீழ் மின்சாரம் வழங்க கடந்த 28ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரு பொதுப்பாதையில் மின்கம்பங்கள் நடுவதற்கு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உயர் மின்னழுத்தம் கம்பிகள் தெருக்களின் வழியாக சென்றால் உயிர்பலி ஏற்படும். எனவே இந்த பொதுப்பாதை வழியாக மின்கம்பம் அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் ஏற்கனவே உள்ள உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் இங்கு மின் கம்பங்கள் அமைக்கக்கூடாது என மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.