மதுரை, செப். 10: பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியராக கடந்த 2013 முதல் பணியாற்றி வருபவர் கர்ணமகாராஜன். இவர் கேரள மாணவி ஒருவருக்கு பிஎச்டி வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல்ரீதியாக தனக்கு தொல்லை கொடுத்ததாக, கர்ணமகாராஜன் மீது அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். புகார் குறித்து விசாரிக்க பல்கலைக்கழகத்தில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதில் மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், புகாருக்குள்ளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இந்த பரிந்துரை, கடந்த பிப். 5ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆக. 22ல் துணைவேந்தர் தலைமையில் நடந்த அவசர சிண்டிகேட் கூட்டத்தில், பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளித்து அறிவிக்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வை எதிர்த்து பேராசிரியர் கர்ணமகாராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.