பெரம்பலூர், செப். 10: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் கடந்த மே நடந்த தேர்தலில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதி கிராமமான பாடாலூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது: என்னை பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற்று 100 நாட்களாகிவிட்டது. இந்த 100 நாட்களில் நான் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியான ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 50 பேர் வீதம் 6 சட்டப்பேரவை தொகுதிக்கும் மொத்தம் 300 பேருக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக மேல்படிப்பு படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கடந்த கோடையில் நிலவிய தண்ணீர் பிரச்னையை தீர்க்க சொந்த செலவில் லாரிகள் மூலம் தண்ணீர் விட நடவடிக்கை எடுத்தேன். அதேபோல் தற்போது தொகுதியில் உள்ள 100 பள்ளிகளுக்கு தலா ஒரு கம்ப்யூட்டர் வீதம் வழங்கவுள்ளேன். அரியலூர்- பெரம்பலூர்- துறையூர்- நாமக்கல் வழித்தடத்தில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்க பாராளுமன்றத்தில் பேசியுள்ளேன்.