பாடாலூர்,ஆக 22: ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விடாமுயற்சி மற்றும் ஈடுபாட்டினால் சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரில் உள்ள ஊர் ஏரிக்கு நீர் வந்துள்ளது. மழை நீரோடு சேர்ந்து வந்து கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து ஆர்வமுடன் அகற்றியதை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.ஆலத்தூர் தாலுகா அல்லி நகரம் கிராமத்தில் உள்ள ஊர் ஏரிக்கு தண்ணீர் வந்து ஏறக்குறைய 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அந்த பகுதியில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாடு, ஏரிகுளங்கள் மற்றும் வரத்துவாய்க்கால்களின் அவசியத்தை உணர்ந்த ஊர் இளைஞர்கள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நிதி திரட்டி ஊர் ஏரி மற்றும் தெற்கு குலாம் ஏரி என்ற இரு ஏரிகளில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி, முறையாக ஆழப்படுத்தி, பாலங்கள் அமைத்து நீர்வரத்துகளை சீர் செய்தனர். அதன் பயனாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் இரண்டு ஏரிகளிலும் தண்ணீர் ஓரளவிற்கு வந்துள்ளது. குறிப்பாக ஊர் ஏரிக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஊர் ஏரியில் உள்ள நன்னீர்க்கிணறு பல வருடங்களாக வறண்டு போய்க் காணப்பட்டது. ஏரிக்கு வந்துள்ள நீரால் இப்போது கிணற்றில் நீர் ஊறத் தொடங்கியுள்ளது. இதே போல இந்த ஏரியின் கரைப் பகுதியில் உள்ள அடிபம்பில் ஏரிக்கு தண்ணீர் வந்ததும் தண்ணீர் வர ஆரம்பித்தது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் கூடுதல் நம்பிக்கையை வளர்ததுள்ளது.