ஊத்துக்கோட்டை, ஆக. 11: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த ஜூலை 17ம் தேதி தொடங்கியது. இந்த விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என 14 வாரங்கள் நடைபெறும்.
இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். அவ்வாறு ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் இரவு தங்குவதற்கு கோயில் சார்பில் கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் வசதிக்காக தங்குவதற்காக கட்டிட வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தற்போது 4-வது வாரம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்படும். இதனால் தனிநபர்கள் ஆரணி ஆற்றில் தீப்பிடிக்காத தற்காலிக கொட்டகைகளை அமைத்து வருகிறார்கள். இதில் பக்தர்கள் இரவு தங்கி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். அவர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர்.