குன்னூர், ஜூலை 23: குன்னூர் அருகே ஓடையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து ஒட்டுநர் படுகாயமடைந்தார். ஊட்டி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் ஒன்று பராமரிப்பு பணிக்காக குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் பிருந்தாவன் அருகேயுள்ள தனியார் பணிமனைக்கு பராமரிப்பிற்கு நேற்று வந்தது. அப்போது அங்கே ஆம்புலன்ஸ் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், சற்று முன்னே சென்று திருப்ப ஊட்டி தங்காடு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சந்திப் (32) முயற்சி செய்துள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் கவிழ்ந்தது. இதில் சந்தீப் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.