மனைவியுடன் கள்ளக்காதலால் ஆத்திரம் வாலிபரை எரித்து கொலை செய்த லாரி டிரைவர், தந்தை கைது

துறையூர், ஜூலை 23: துறையூர் அருகே மனைவியுடன் கள்ளக்காதலால் வீட்டில் தூங்கிய வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்த வழக்கில் லாரி டிரைவர், அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.துறையூர் அருகே வேங்கடத்தானூர் தங்கராசு என்பவரின் 3வது மகன் பிரபாகரன்(32). திருணமாகாத இவர் மருவத்தூர் அருகேயுள்ள தனியார் வெடிமருந்து தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் நிர்வாகம் இவரை பணிநீக்கம் செய்தது. இதனால் ஊரில் கூலி வேலை செய்து வந்தார். பிரபாகரனுக்கும், அவரது வீட்டின் எதிர்வீட்டில் வசிக்கும் லாரி டிரைவர் சந்திரகுமார் மனைவி மணிமேகலைக்கும் (31) கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை சந்திரகுமாரும், அவருடைய தந்தை முத்துசாமியும் கண்டித்தும் மணிமேகலை கண்டுகொள்ளவில்லை. மேலும் சந்திரகுமாரின் உறவினர் ஒருவர் பிரபாகரனை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 21ம் தேதி கூலிவேலை செய்து விட்டு வீட்டிற்கு வந்த பிரபாகரன் இரவு வீட்டில் படுத்திருந்தார். இரவு 11 மணியளவில் அவரது வீட்டில் தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு தண்ணீர் ஊற்றி தீயைஅணைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரபாகரனும் அவர் படுத்திருந்த கட்டில், அருகிருந்த டிவி உள்ளிட்ட பொருட்கள்எரிந்து கிடந்தது. பிரபாகரன் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து துறையூர் போலீசார் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு அருகே நூறு மீட்டர் தூரத்தில் கிடந்த 5 லிட்டர் காலி பெட்ரோல் கேனையும், தீப்பந்தமாக பயன்படுத்தப்பட்ட நீண்ட தடியையும் கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர். அதனைத் தொடர்ந்து பிரபாகரனின் எதிர் வீட்டில் உள்ள மணிமேகலையின் கணவர் சந்திரகுமார்(42) மற்றும் அவரது தந்தை முத்துசாமி (62) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தபோது, முத்துசாமி செங்காட்டுபெட்டி சென்று 10 லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்து பிரபாகரன் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில் தந்தையும், மகனும் பெட்ரோல் ஊற்றிய தீ பந்தத்தை வைத்து கொளுத்தியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: