திருவள்ளூர், ஜூலை 18: சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக, 1944ம் ஆண்டு கொற்றலை ஆற்றின் நடுவில் பூண்டி ஏரி கட்டப்பட்டது. நடப்பாண்டு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. மேலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வந்த தண்ணீரும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இதனால், பூண்டி ஏரி தற்போது முற்றிலும் வறண்டு கிடக்கிறது.இதையடுத்து, சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்க பூண்டி ஏரியை சுற்றியுள்ள புல்லரம்பாக்கம், கைவண்டூர், காரணை, சிறுவானூர், வெள்ளியூர் உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய பம்ப் ஷெட்களில் இருந்து, ஒப்பந்த அடிப்படையில், தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நீர் உந்து நிலையத்தில் பெரிய தொட்டியில் சேகரிக்கின்றனர்.இதற்கென, ஒரு மணி நேரத்துக்கு ₹42 வீதம் விவசாயிகளுக்கு பணம் தருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.