உத்திரமேரூர், ஜூலை 16: உத்திரமேரூர் அருகே தண்ணீரின்றி வறட்சியால் கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி, ஆதவப்பாக்கம், மணல்மேடு, நெய்யாடுவாக்கம், காவாம்பயிர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இவர்களின் விவசாய நிலத்தில் வேர்கடலை, நெல், வாழை, தர்பூசணி உள்ளிட்டவைகள் பயிரிடுவது வழக்கம். இதனால், பயிர்கள் மகசூலைத் தந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வந்தன.இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், விவசாயிகளின் பாசன கிணறுகள் நீரின்றி வற்றி காணப்படுகிறது. நீர் இல்லாதால் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் காய்ந்துவிட்டன. இதனால், விவசாயிகளுக்கும் ஏராளமான நட்டம் ஏற்பட்டது. இவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டதுடன் விவசாயிகள் நிலை கேள்விக்குறியாக உள்ளது.