குடிநீர் கேட்டு துறையூர் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை

துறையூர், ஜூலை 12: துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தைச் சேர்ந்த சித்திரை நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் 6 மாதமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறியும், உடனடியாக குடிநீர் வழங்க கேட்டும் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படாததால் காலையில் வேலைக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் உரிய நேரத்தில் செல்ல முடியாததால் பாதிப்படைந்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறினர். தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு கூட போதுமான அளவு தண்ணீர் கொடுத்து பராமரிக்க முடியாததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தத்துடன் கூறினர். ஆகவே தங்கள் பகுதிக்கு முறையாக உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கூறி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி இப்பகுதி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: