அறந்தாங்கி, ஜூலை 12: அறந்தாங்கி அருகே அரசு கலைக் கல்லூரியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அறந்தாங்கியை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 900த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். தினமும் 2 ஷிப்ட்களாக கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் மாணவ, மாணவியரின் தேவைக்கு ஏற்ப குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. இதுகுறித்து மாணவ, மாணவியர் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும், கல்லூரி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்துதர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் அடிப்படை வசதிகள் கேட்டு, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும், கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.