மதுராந்தகம், ஜூன் 27: குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.மதுராந்தகம் நகரை சுற்றி நிலத்தடி நீர் குறைந்து விட்டதால், நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. 2 நாட்களுக்கு ஒருமுறை அரைமணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இதேபோல் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் 246 ஆழ்துளை கிணறு கைப்பம்புகள் உள்ளன. அதில் நூற்றுக்கும் மேற்பட்டவை பழுதாகி உள்ளன. இதுபோன்ற குடிநீர் பஞ்சத்தை நிரந்தரமாக போக்க மாநிலத்தில் உள்ள பெரிய ஏரிகளின் வரிசை பட்டியலில் 6 இடத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை.