பெ.நா.பாளையம், ஜூன் 25: ஜம்புகண்டி அருகே மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை தடாகம் ரோடு கணுவாய் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். மருத்துவர். இவரது மனைவி ஷோபனா (46). இவர்களக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் ஆனைகட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் ஷோபனா அவரது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதும், பள்ளி முடிந்ததும் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கம். இந்தநிலையில், நேற்று மாலை வழக்கம் போல் ஷோபனா தனது மகளை பள்ளியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இவர்களது வாகனம் ஜம்புகண்டி அரசு பள்ளி அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி, அசோகன் ஆகிய வாலிபர்கள் ஷோபனா வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் ஷோபனா பரிதாபமாக பலியானார். அவரது மகள் படுகாயமடைந்தார். மேலும், இரு வாலிபர்களும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.