திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூரில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டாலும் நெல் மற்றும் கரும்பு பயிர்களையே அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பட்டறைபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி ஏரிகளிலும் நீர் மட்டம் குறைந்து வற்ற துவங்கியதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து இப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் கிணறுகளில் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.