புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறையால் பயணிகள் அதிகம் செல்லும் சில வழித்தடங்களில் கூடுதல் பேருந்து இயக்காததால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சென்னை, திருச்சி, கோயாம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமேஸ்வரம், காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் பஸ்கள் செல்கிறது. புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் அனைத்தும் தினசரி இயக்குவதில்லை. இதற்கு முக்கிய காரணம் போதிய ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பற்றாக்குறையே. இதனால் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் கூடுதல் பேருந்துகள் இயக்காமல் டெப்போவில் நிறுத்தப்பட்டு கிடக்கிறது. இதனால் பயணிகள் போக வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்படுகிறது.