திருப்பத்தூர், ஜூன் 19: இ-சேவை மையத்தில் பொதுமக்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தாசில்தார் எச்சரிக்கை விடுத்தார். திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் வட்டார இ-சேவை மையத்தின் நடத்துனர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தாசில்தார் கூறியதாவது:பொதுமக்களிடம் இருந்து இ-சேவை மையத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இ-சேவை மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும்.