ஊட்டி, ஜூன் 19: ஊட்டி படகு இல்ல வளாகத்தில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள நடைபாதை பராமரிப்பின்றி பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் காணப்படுவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஊட்டி ஏரியில் சுற்றுலாத்துறை கட்டுபாட்டில் படகு இல்லம் உள்ளது. இப்படகு இல்லத்தில் மிதிபடகுகள், துடுப்பு படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் உள்ளன. ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் ஊட்டியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். ஊட்டி படகு இல்லத்தில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் உள்ள பகுதியில் இருந்து ஏரியை ஒட்டி சிறு நடைபாதை உள்ளது. படகு இல்லத்திற்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நடைபயணம் மேற்கொண்டு ஏரியின் அழகை ரசிப்பதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைபாதை அமைக்கப்பட்டது. அதன் பின்பு பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரி நடைபாதை சீரமைக்கப்பட்டது.