திருவள்ளூர், ஜூன் 18: பள்ளிகளின் அருகே சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனையால் மாணவர்கள் பாதிப்படைகின்றனர். பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளிடம் பெற்றோர் காசு, பணம் கொடுத்து அனுப்புவதும், பாட இடைவேளை நேரத்தில் கடைகளில் விற்கும் தின்பண்டங்களை வாங்கிச்சாப்பிடும் நடைமுறை காலங்காலமாக உள்ளது.அன்றைய காலங்களில் பள்ளிகளின் அருகே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நெல்லிக்காய், கொய்யா, மாங்காய், நாவல், ஆரஞ்சு, இலந்தைப் பழம், பனங்கிழக்கு, பணியாரம், கடலை மிட்டாய் என ஏதாவது ஒரு வகை சத்துக்கள் அடங்கிய பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்தனர்.இவற்றின் சுவையால் பள்ளி குழந்தைகள் பாடவேளை முடிந்ததும் மிட்டாய் மற்றும் பெட்டி கடைளை வலம் வருவார்கள். அன்று கடைகளில் விற்ற தின்பண்டங்கள் சத்தானதாகவும், சுகாதாரமானதாகவும் கிடைத்தது. ஆனால் இன்றைய நிலை அதற்கு நேர் எதிர்மாறாக உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் எதிரே சுகாதாரமற்ற வகையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நோய் பரப்பும் காரணிகளான ஈ, கொசு, விஷ பூச்சிகள் தின்பண்டங்கள் மீது உட்கார்கிறது. வியாபாரிகள் பொருட்களை மூடி வைப்பதும் கிடையாது.