சென்னை, ஜூன் 14: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார். திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 473 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.2 கோடியே 5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக 2018ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முன்னாள் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், முன்னாள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி வழங்கி கவுரவித்தார். மேலும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கான 2018ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளையும், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கான 2018ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளையும், மக்கும் கழிவிலிருந்து உரம் அல்லது மீத்தேன் எரிவாயு தயாரித்தல், மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அனுப்புதல், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துதல், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றியதற்காக 2018ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.