சாலையில் நடந்து செல்பவர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு  பைக்கில் வந்த மர்ம கும்பல், நடந்து செல்வோரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்வதாக மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனே ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மதுரவாயல் அருகே கத்தியை சுழற்றி சென்றவர்களில் 3 பேரை மடக்கி பிடித்தனர்.  மற்றவர்கள் தப்பிவிட்டனர். விசாரணையில் மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) பிச்சுமணி (23), அரவிந்த் (23), சேத்துப்பட்டை சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், சாலையில் நடந்து சென்றவர்களை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. எனவே 3 பேரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். பொன்னேரி:  திருவாரூர் மாவட்டம், கம்மாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுபாஷ்கர் (29). நேற்று முன்தினம் சரக்கு லாரியில் சென்னை வந்து மீஞ்சூர் அடுத்த பெரியமுல்லைவாயல் 400அடி சாலையோரம் இரவு 11 மணியளவில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளார்.

அப்போது பைக்கில் வந்த 3 பேர் சுபாஷ்கரை லாரியில் இருந்து கீழே இறக்கி, அவரது முகத்தை கல்லால் சரமாரியாக தாக்கி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ₹5 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த சுபாஷ்கரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது அங்கு கிடந்த செல்போனை கொண்டு விசாரணை நடத்தியபோது சுபாஷ்கரை தாக்கிய பெரியமுல்லைவாயல் காலனியை சேர்ந்த ஆகாஷ் (24), ஆதித்யா (17), ஜெகதீஷ் (25) ஆகிய 3 பேரை நேற்று காலை கைது செய்தனர்.

Related Stories: