சிவகங்கை, ஜூன் 12: பத்தாம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து கூடுதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க அரசே திட்டம் செயல்படுத்துவதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பிளஸ்1, பிளஸ்2 படிக்க அரசு உதவித்தொகை வழங்குகிறது. அரசுப்பள்ளிகளில் படித்து கூடுதல் மதிப்பெண் எடுத்த பி.சி, எம்.பி.சி, சீர்மரபினர் மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். மாவட்டத்திற்கு பத்திற்கும் மேற்பட்டோர் வீதம் மாநிலம் முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அரசே தனியார் பள்ளிகளில் சேர்க்க தேர்வு செய்கிறது. இவர்களுக்கு அரசே நிதியுதவி வழங்குகிறது. இவ்வாறு அரசுப்பள்ளிகளில் படித்து கூடுதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை அரசே தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் செயலுக்கு ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.