திராவிட இயக்கத்திற்கு இளைஞர்கள் அணிவகுத்து அதிகளவில் வர வேண்டும் மாஜி அமைச்சர் மு.தென்னவன் பேச்சு

காரைக்குடி, செப். 19: காரைக்குடியில் நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. பதிப்பக நிறுவனர் இக்லாஸ் உசேன் வரவேற்றார். திரவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், திமுக மாநில மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பேசுகையில், தந்தை பெரியாரின் கொள்கைகளை, லட்சியங்களை கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பிவரும் பணியை ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் செய்துவருகின்றனர். நான் திமுகவில் இருப்பவன் தான் அதேவேளையில் திமுகவில் இருக்கும் திக காரன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கத்திற்கான தேவை இன்னும் அதிகம் இருக்கிறது.

இந்த இயக்கத்தை நூற்றாண்டு காலம் எடுத்துச் செல்ல இளைஞர்கள் அணிவகுத்து வர வேண்டும், என்றார். நிகழ்ச்சியில் ராம.வைரமுத்து எழுதிய திராவிடம் வென்றது, எஸ்.சொக்கலிங்கம் எழுதிய பங்குச்சந்தை மோசடிகள், ஆணையமும் வரலாறுகளும் என்ற நூல்கள் வெளியிடப்பட்டது. மாவட்ட தி.க காப்பாளர் சாமிதிராவிடமணி, மாவட்ட தி.க தலைவர் வைகறை, தி.க பேச்சாளர் என்னாரெசுபிராட்லா, பகுத்தறிவு கழக துணைப் பொதுச்செயலாளர் கண்மணி, எழுத்தாளர் மன்ற தலைவர் குமரன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திராவிட இயக்கத்திற்கு இளைஞர்கள் அணிவகுத்து அதிகளவில் வர வேண்டும் மாஜி அமைச்சர் மு.தென்னவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: