வெள்ளகோவில், ஜூன் 7: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வெள்ளகோவில் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை- கரூர் தேசிய நெடுஞ்சாலை 114 கி.மீ தூரம் உள்ளது. இவ்விரண்டு நகரங்கள் மற்றும் பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில் என தொழில் நகரங்களையும் இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளதால் இதில் வாகன போக்குவரத்து அதிகம். குறிப்பாக திருப்பூர், கோவையில் இருந்து கரூர் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் என முக்கிய நகரங்களுக்கு வாகன போக்குவரத்து அதிமாக உள்ளது. ஈரோடு மூலனூர் செல்ல வெள்ளகோவில் நகரத்தை கடந்து தான் செல்கின்றனர். நிமிடத்திற்கு 75 வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கிறது. இதனால் எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட அப்பாவிகள் பலர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இதற்கு புறவழிச்சாலை அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வு ஆகும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.