திருச்சி, ஜூன் 7: அரியமங்கலம் குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பற்றிய தீயை நேற்று மதியம் வரை மாநகராட்சி ஊழியர்கள் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தால் பகுதி மக்கள் கண் எரிச்சல், தூக்கமின்மையால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.
திருச்சி அரியமங்கலத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 400 டன் வரை மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இங்கு மக்கும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் அதிகரித்து விட்டதால், அவற்றை இயற்கை உரமாக தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இருப்பினும் தற்போது குப்பைகள் சேர்ந்து மலை போல் காட்சியளிக்கிறது. இந்த குப்பை குவியல்கள் சுமார் 30 அடி உயரம் வரை உள்ளது. இதில் கடந்த மாதம் திடீரென குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 2 நாட்கள் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.