திருப்பூர், ஜூன்4:திருப்பூர் மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் முழுவதும் எஸ்.பி., உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். லாட்டரி விற்பனை செய்ததாக ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் விற்பனை பணம் ரூ.81,400 பறிமுதல் செய்யப்பட்டன. சீட்டாட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.18,330 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக, 35 பேர் கைது செய்யப்பட்டு, 218 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறப்புக்குழுவினர் ஆய்வில், மோட்டார் வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக, 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.