ஆத்தூர், ஜூன் 4: ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், முதல் நாளிலேயே மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேம்பாட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின் நேற்று பள்ளி திறந்த முதல் நாளே, மாணவிகளுக்கு முதல் பருவத்திற்கான அனைத்து பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதுகுறித்து மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறுகையில், ‘பள்ளி திறந்த முதல் நாளிலேயே அனைத்து பாட புத்தகங்களுக்கும் வழங்கப்பட்டதால், எங்களால் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்களை உடனுக்குடன் படிக்க முடியும். தேர்விற்கு நல்ல முறையில் தயாராகவும் முடியும்,’ என்றனர். பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘பருவ பாட புத்தகங்கள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதால், எங்களால் வகுப்புகளில் திறம்பட பாடங்களை விளக்கி நடத்த முடியும்,’ என்றனர்.