சென்னை, ஜூன் 4: காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் பட்டை நாமமிட்டு, கறுப்பு பேட்ஜ் அணிந்து சங்க பொதுக்குழுவில் கலந்துகொண்டனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் 2017--18ம் ஆண்டின் வரவு, செலவு இனங்களில் பெரும் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இச்சங்கத்தின் ஊழல் புகார்கள் குறித்து கைத்தறித்துறை இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ் விசாரணை நடத்தினார்.இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் நடத்தவேண்டிய சங்க பொதுக்குழுக் கூட்டம் நடத்தாமல், தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய பொங்கல் போனஸ், இந்த ஆண்டு வழங்கவில்லை.இதைதொடர்ந்து, கடந்த மாதம் இச்சங்கத்தின் தணிக்கை அறிக்கை முடிக்கப்பட்ட நிலையில், அதில் பல்வேறு ஊழல் முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள் குறித்து தகவல் வெளியானது. அதன் காரணமாக காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க மேலாண் இயக்குநர் மோகன்குமார், மேலாளர் முருகானந்தம், டிசைனர் கருணாநிதி ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.