ஆத்தூர், மே 30: ஆத்தூர் அருகே துலுக்கனூர் ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர்-பெரம்பலூர் சாலையில் துலுக்கனூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கான நீர்வரத்து பாதைகள் முற்றிலும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால் நீண்ட காலமாகவே நீர்வரத்தின்றி வறண்டு போய் உள்ளது. இந்நிலையில், இந்த ஏரி பகுதியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகக்கூடிய குப்பை கழிவுகளை மொத்தமாக கொண்டு வந்து குவிப்பதும், எரிப்பதுமாக உள்ளனர். இதனால், ஏரியின் சுற்றுப்புறப்பகுதியில் சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்படுவதோடு, ஏரியின் தூய்மையும் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.