நாகை, மே 30: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகை நகர எல்லையை தூய்மை செய்யும் பணியில் தூய்மை பரப்புரையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.நாகை நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாகை நகர எல்லையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை விதியின்படி வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என்று பிரித்து வாங்கும் முயற்சியில் தூய்மை பரப்புரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பரப்புரையாளர்கள் காலை 7 மணிக்கு எல்லாம் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.மேலும் குப்பைகள் சேகரிக்க செல்லும் முன் மினிலோடு ஆட்டோ மூலம் விளம்பரம் செய்து கொண்டு செல்கின்றனர். மேலும் நடத்துனர்கள் பயன்படுத்தும் விசில் அடித்தும் வீடுகளில் உள்ள குப்பைகளை கேட்டு வாங்கி சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை நாகையில் உள்ள உரக்குடோனுக்கு கொண்டு சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து மக்கும் குப்பையை உரமாக மாற்றுகின்றனர். மக்காத குப்பையை கொண்டு மின்சாரம் தயாரித்து வருகின்றனர்.