ஊட்டி, மே 29: முதுமலையில் சாலையோரங்களில் வலம் வரும் காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பகம் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. திரும்பும் திசையெல்லாம் பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது. இதனால், வன விலங்குகள் அதிகம் வலம் வரத்துவங்கியுள்ளன. பெரும்பாலான இடங்களில் காட்டு யானைகள் கூட்டமாகவும், ஒற்றையாகவும் வலம் வருகின்றன. காட்டு யானைகள் சாலையோரங்களில் சுற்றித் திரிவதை பார்த்தும், உணவு உட்கொள்வதை கண்டு ரசிக்க பல சுற்றுலா பயணிகள் அபாயத்தை உணராமல் வாகனத்தை நிறுத்துகின்றனர்.