மன்னார்குடி, மே. 28: பெருகவாழ்ந்தான் ஊராட்சி மன்றம் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் சுமார் 5 இடங்களில் ஆழ்துளை போர்வெல் போடப்பட்டு அவற்றின் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட மேல்நிலைநீர் தேக்கத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்து போனதாலும், ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதாலும் பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் ஆழ்துளை கிணறுகள் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படும் தண்ணீர் உப்பு கலந்த தண்ணீராக மாறிவிட்டது. இந்த தண்ணீரை குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்துவதால் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். குறிப்பாக உப்பு கலந்த தண்ணீரை குடித்ததால் அண்மையில் சுமார் 10 க்கும் மேற்பட் டோர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.