புதுக்கோட்டை, மே 25: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தெரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, அறந்தாங்கி கலை அறியவில் கல்லூரி, கறம்பக்குடி கலை அறிவியல் கல்லூரி என நான்கு இடங்களில் அரசு கலை அறிவியில் கல்லூரிகள் உள்ளது. இந்த கல்லூரிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். இதில் அறந்தாங்கியில் உள்ள கலை அறிவியில் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக உள்ளது. இதனால் இங்கு போதிய பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு கலை அறியவில் கல்லூரியாக உள்ள மன்னர் கல்லூரி, மகளிர் கலை அறியவில் கல்லூரி, கறம்பக்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இந்த மூன்று கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கல்வி அனைத்து பாடங்களையும் தெரிந்துகொள்ள முடியதா நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் அரசு கலை அறியவில் கல்லூரியில் சுமார் 30 முதல் 35 பேராசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.