ஜெயங்கொண்டம், மே 25: உடையார்பாளையம் பேரூராட்சியில் கடைவீதியில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயங்கொண்டம் அடுத்த உடையார்பாளையம் பேரூராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த பேரூராட்சியில் பல சாலைகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன, நீண்ட நாட்களாக உடையார்பாளையம் நகருக்குள் இருந்து புதிதாக கட்டப்பட்டு செயல் படுத்தப்படாமல் இருக்கும் திருச்சி-சிதம்பரம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சாலை புதுப்பிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலையில் அருகே தத்தனூரில் உள்ள தனியார் பள்ளி கல்லூரிக்கும் உடையார்பாளையம் வாரச்சந்தைக்கு செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், நுகர்வோர்கள் உள்ளிட்டோர் நடந்தும், சைக்கிளிலும், மினி லாரிகளிலும் சென்று வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே இந்த சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்து சைக்கிளில் சென்றால்கூட தவறி கீழே விழும் அளவிற்கு மிக மோசமாக உள்ளது.