சென்னை, மே 25: பல்வேறு வழக்குகளில் சம்பந்தபட்டவரை, விசாரணைக்கு அழைத்து வந்தபோது, காவல் நிலையத்தில் மர்மமாக இறந்தார். இதுகுறித்து காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நாராயணன் (32). விழுப்புரத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். இவர் மீது வடலூர், விழுப்புரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, திருட்டு, அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி என்பது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றி பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இதுதொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, நாராயணன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன், நாராயணனை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்தனர்.அப்போது, காவல் நிலைய லாக்கப்பில் நாராயணன் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.