திருவள்ளூர், மே 25: திருவள்ளூரில் கோடையில் குளிர்ச்சி தரும் பனை நுங்கு வியாபாரம் சூடுபிடித்தது. சிறுவர்கள், பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு நுங்கை வாங்கிச் செல்கின்றனர்.கோடை காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்புசணி, நுங்கு, இளநீர் அதிகளவில் விற்கப்படும். இதில் முதலிடம் பிடிப்பது நுங்கு வியாபாரம் மட்டுமே. கோடை காலங்களில் மட்டுமே கிடைக்க கூடிய பொருள் என்பதால் நுங்கு வியாபாரிகளிடம் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.திருவள்ளூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பனைநுங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூன்று நுங்கு ரூ.10 முதல் 20 வரை விற்பனை செய்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நுங்கு வியாபாரிகள் நுங்கை சீவி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.