தென்காசி, மே 25: தென்காசி மக்களவை தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக அதிகபட்சமாக 23 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. தென்காசி மக்களவை தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், வில்லிபுத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், வில்லிபுத்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் தனித்தொகுதிகள் ஆகும். இதில் வாக்குகள் அடிப்படையில் திமுக வேட்பாளர் தனுஷ்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இருவருக்குமே தென்காசி தொகுதியில் தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது தனுஷ்குமார் ஆறு தொகுதிகளில் பெற்ற வாக்குகளில் குறைந்த பட்சமாக ராஜபாளையத்தில் 67 ஆயிரத்து 408 வாக்குகளும், அதிகபட்சமாக தென்காசியில் 90 ஆயிரத்து 378 வாக்குகளும் பெற்றுள்ளார். அதே போன்று டாக்டர் கிருஷ்ணசாமி குறைந்தபட்சமாக வாசுதேவநல்லூரில் 50 ஆயிரத்து 873 வாக்குகள் பெற்றுள்ளார். அதிகபட்சமாக தென்காசியில் 69 ஆயிரத்து 999 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் தனுஷ்குமார் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் தென்காசி தொகுதியில் தான் அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளனர்.