மஞ்சூர், மே. 24: மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஆ.ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக., வேட்பாளர் தியாகராஜனைவிட சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆ.ராசா வெற்றியை தொடர்ந்து மஞ்சூரில் மாவட்ட திமுக., இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ, மாவட்ட பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன், மாடக்கண்ணு, ஈஸ்வரன், பேரூராட்சி அவை தலைவர் ஆறுமுகம், ராஜேந்திரன், ராஜசேகர், கிளை செயலாளர்கள் நாராயணன், சிவக்குமார், ராஜன், மணி, பிரபு, பூபதி, மாணிக்கம், லுாயிஸ் உள்பட திமுக.,வினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதேபோல் எடக்காடு, பிக்கட்டி, பெங்கால் மட்டம், கைகாட்டி, எமரால்டு, இத்தலார் சுற்றுவட்டார பகுதிகளிலும் திமுக.,வினர் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.