துறையூரில் ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பீகார் வாலிபர் பலி

துறையூர், மே 21: துறையூரில் ஓடும் மினி பஸ்சிலிருந்து குதித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். பீகார் மாநிலம் மோத்தியார் பகுதியைச் சேர்ந்தவர் மதன்பிரசாத் மகன் பப்புகுமார் (32). இவர் துறையூரில் பெரம்பலூர் ரோட்டில் உள்ள தனியார் மாடர்ன் ரைஸ் மில்லில் தங்கி அங்கு கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று துறையூரில் உள்ள வங்கிக்குச் சென்று  ஊருக்கு பணம் அனுப்பிவிட்டு அங்கிருந்து ரைஸ்மில்லுக்கு திரும்புவதற்காக மாலை 3 மணியளவில் கீரம்பூர் செல்லும் மினிபஸ்சில் ஏறினார். மில்லில் இருந்து பஸ் நிறுத்தம் சிறிது தொலைவு என்பதால் மில்  அருகே பஸ் வந்ததும் கீழே குதித்துள்ளார். அப்போது தடுமாறி விழுந்த பப்புகுமார் மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். துறையூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: