புதுக்கோட்டை, மே 21: வயலோகம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் முத்துமாரிமய்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான வைகாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி வயலோகத்தை சுற்றியுள்ள குடுமியான்மலை, குளவாய்ப்பட்டி, காட்டுப்பட்டி புதூர், அகரப்பட்டி, தச்சம்பட்டி, முதலிப்பட்டி, விசலூர், மாங்குடி, புல்வயல், மண்வேளாம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பூக்களை வைத்து ஊர்வலமாகவும். தலையில் சுமந்தவாறும் கோயிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிப்பட்டனர். இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.